Monday, August 9, 2010

அகில உலகையே கலக்கிகொண்டிருக்கும் சூப்பர் ஸ்டாரின் எந்திரன் படப்பாடல்கள்



இன்டர்நெட் டவுன்லோட்,எம்.பி.த்ரீ யுகமான இன்றைக்கும் விற்பனையில் புதிய சாதனை படைத்தது கலக்கிக்கொண்டிருக்கிறது சூப்பர் ஸ்டாரின் எந்திரன் படப்பாடல்கள். சூப்பர் ஸ்டார், ஏ. ஆர். ரகுமான், கவிப்பேரரசு வைரமுத்து, ஷங்கர்,சன் பிக்சர்ஸ் கூட்டணி வெற்றிக்கூட்டணி என்பதை ஆணித்தரமாக நிரூபித்துள்ளது.
முதல் பாடல் பூமிக்கு வரும் ஏந்திரனை வரவேற்பதாக அமைந்துள்ளது.
'புதிய மனிதா பூமிக்கு வா ... எக்கை வார்த்து சிலிகான் சேர்த்து வயரூட்டி, உயிரூட்டி ஹார்ட் டிஸ்கில் நினைவூட்டி அழியாத உடலோடு வடியாத உயிரோடு ஆறாம் அறிவை அரைத்து ஊற்றி ஏழாம் அறிவை எழுப்பும் முயற்சி என்று ஆரம்பித்து
'நான் கண்டது ஆறறிவு -நீ கண்டது பேரறிவு ,நான் கற்றது ஆறு மொழி-நீ பெற்றது நூறு மொழி , ஈரல் கணையம் துன்பமில்லை, இதயக் கோளாறேதுமில்லை.தந்திர மனிதன் வாழ்வதுமில்லை,எந்திரம் வீழ்வதில்லை என்று எந்திரன் உருவாக்கத்தையும்,பெருமைகளையும் பற்றி அற்புதமாக பாடல் எழுதியுள்ளார் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள். ரகுமான் அவர்களின் பிரமிக்க வைக்கும் இசையில் அவரும், பாடும் நிலா எஸ்.பி.பி, மற்றும் ரகுமானின் மகள் கதீஜா ரகுமான் முதல் முறையாகவும் பாடியுள்ளார்கள் . அட்டகாசமான பாடல்.

இரண்டாவது பாடல் விஜய் பிரகாஷ், ஸ்ரேயா கோசல் ஆகியோரின் இனிமையான குரலில் ஒலிக்கும் 'காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை, நியுட்ரான் எலெக்ட்ரான் உன் நீலக்கண்ணில் மொத்தம் எத்தனை ...உன்னை நினைத்தால் திசுக்கள் தோறும் ஆசைச்சிந்தனை... அழகின் மொத்தம் நீயா என்று காதலையும் விஞ்ஞானத்தையும் கலந்து கலக்குகிறார் கவிப்பேரரசு. மேலும்
'பட்டாம்பூச்சி கால்களைக் கொண்டு தான் ருசியறியும்-காதல் கொள்ளும் மனிதப் பூச்சி கண்களைக்கொண்டு தான் ருசியறியும்.ஓடுகிற தண்ணியில் ஆக்சிஜன் அதிகம் - பாடுகிற மனசுக்குள் ஆசைகள் அதிகம் என்றெல்லாம் பிய்த்து உதறியிருக்கிறார் வைரமுத்து அவர்கள். எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத பாடல்.

மூன்றாவதாக கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் மகன் பேராசிரியர் கார்க்கி அவர்கள் முதல் முறையாக எழுதியுள்ள 'இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குதோ' என்ற பாடல். முப்பது ஆண்டுகளுக்கு முன் வைரமுத்து அவர்கள் எழுதி முதலில் வெளியான பாடல் இதே சூப்பர் ஸ்டாருக்காக எழுதிய 'காளி' திரைப்படப்பாடல். முப்பது வருடங்களுக்கு பின் இதே சூப்பர் ஸ்டாருக்காக அவர் மகன் முதல் பாடல் எழுதுவது இறைவன் கொடுத்த வரமல்லவா...
தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்பதை நிரூபித்துள்ளார் கார்க்கி அவர்கள்.

'இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குதோ -முதல் முறை காதல் அரும்புதோ
பூஜ்யம் ஒன்றோடு பூவாசம் இன்றோடு- மின்மீன்கள் விண்ணோடு, மின்னல்கள் கண்ணோடு -கூகுல்கள் காணாத தேடல்கள் என்னோடு என்று ஆரம்பித்து
'எச்சில் இல்லா எந்தன் முத்தம் சர்ச்சை இன்றி கொள்வாயா
ரத்தம் இல்லா காதல் என்று ஒத்திப்போக சொல்வாயா
உயிரியல் மொழிகளில் எந்திரன் நானடி-உளவியல் மொழிகளில் இந்திரன் நானடி
என்று பிரமிக்க வைக்கிறார். ரகுமான் இன்னிசை அமைத்து இனிமையாக பாடி கலக்குகிறார்.

நான்காவதாக வருவது 'அரிமா அரிமா ' பாடல்.
'இவன் பேர் சொன்னதும் பெருமை சொன்னதும் கடலும் கடலும் கைதட்டும்.
இவன் உலகம் தாண்டிய உயரம் கொண்டதில் நிலவும் நிலவும் தலை முட்டும்'
என்று சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் பெருமை சொல்லி ஆரம்பிக்கிறது.
'அரிமா அரிமா நானோ ஆயிரம் அரிமா- உன் போல் ஒரு பொன்மான் கண்டால்
சும்மா விடுமா என்று கர்ஜிக்கிறது. 'உன் பச்சைத்தேனை ஊற்று- என் இச்சைத்தீயை ஆற்று- அடி கச்சைக்கனியே பந்தி நடத்து கட்டில் இலைபோட்டு'
(முதலில் சேலை இலை போட்டு என்று எழுதி பிறகு கட்டில் இலை போட்டு என்று திருத்தம் செய்துள்ளார்) என்றும், காமுற்ற கணினி நான் -சின்னஞ் சிறுசுகளின் இதயம் தின்னும் சிலிகான் சிங்கம் நான் என்றும் பாடல் முழுவதும் சிம்ம கர்ஜனை புரிந்துள்ளார் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள்.

ஐந்தாவதாக பா.விஜய் அவர்களின் சிருங்காரமான வரிகளில் 'கிளிமாஞ்சாரோ-மலைக்கனி மாஞ்சாரோ-கன்னக்குழி மாஞ்சாரோ ' என்ற சூப்பர் பாடல்.
'வேர் வரை நுழையும் வெயிலும் நான்- நீ இலைத்திரை ஏன் இட்டாய்
உதட்டையும் உதட்டையும் பூட்டிக்கொண்டு ஒரு யுகம் முடித்து திற அன்பாய் '
அக்கக்கோ -நான் தின்னிக் கோழி ,அப்பப்போ என்னை பின்னிக்கோ நீ
இப்பப்போ முத்தம் எண்ணிக்கோ நீ ' என்றெல்லாம் பாடலுக்கும் சிருங்காரம் சேர்க்கிறார் பா.விஜய் அவர்கள்.
ஆறாவது பாடல் கார்க்கி அவர்கள் எழுதியுள்ள பூம் பூம் ரோபோடா தாளம் போடா வைக்கும் அருமையான பாடல்.
மொத்தத்தில் ஒவ்வொரு பாடலும்(நீண்ட நாட்களுக்கு பின்) கதையோடு ஒட்டி வரும் ,வித்தியாசமான வரிகளைக்கொண்ட அற்புதமான் பாடல்கள். பிரமிக்க வைக்கும் இசை. ரசிகர்களை அடுத்த கட்ட ரசனைக்கும் அழைத்து செல்கிறது.
இந்திய திரை உலகிலேயே புதிய முயற்சி. வெற்றி நிச்சயம். இது வேத சத்தியம்.